விளையாட்டால் வெற்றி பெற முடியுமா….?
ஆற்றங்கரையோரம் பள்ளி இருந்ததால் ஆற்றில் கபடி விளையாடுவார்கள். நானும் விளையாடியிருக்கிறேன். ஆட்கள் இருந்தால் போதும், இரண்டு அணியாய்ப் பிரிந்து விளையாட்டில் கலக்கி விடலாம். ஓடியாடி, தவ்விக்குதித்து, பாய்ந்து பிடித்து விளையாடும்போது உடம்பே வியர்த்துப் போகும். கபடி அவ்வளவு அருமையான உடற்பயிற்சி.
அப்புறம் கிட்டி என்று விளையாட்டு இருக்கும். பெரிய கம்பு, சின்னக் கம்பு இரண்டை வைத்து விளையாடி, தூள் பரத்தி விடுவார்கள். கிரிக்கெட்டுக்குத் தாய் அதுதான். சில பகுதிகளில் அதை ‘கில்லி’ என்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மவுசு அதற்குக் கிடைக்கவில்லை.
அதுமாதிரி ஒவ்வொரு ஊரிலும் சில மரங்களுக்குக் கீழே மண்ணில் பல்லாங்குழி மாதிரிப் பள்ளம் தோண்டி வைத்திருப்பார்கள். கலர் கலரான கோலிக்குண்டுகளை வைத்துக்கொண்டு, குறிபார்த்து அடிப்பதில்தான் எவ்வளவு குஷி. சிலர் அதில் காசு வைத்தும் விளையாடுவார்கள். ஏதாவது காக்கிச் சட்டை கண்டதும் கோலிக்குண்டுகள் மாதிரி சிதறிப் போய் விடுவார்கள்.
மரங்களைப் பார்த்தால் சிலருக்குக் கை அரிக்க ஆரம்பித்துவிடும். அதற்கென்றே ‘வி’ என்ற நம்மூர் அரசியல்வாதிகள் விரலை விரித்துக் காட்டுகிற மாதிரி, விரிந்திருக்கிற மரக்கட்டையில் தடித்த ரப்பரைக் கட்டி, அதன் நடுவில் வாகான கல்லை வைத்து மரத்தில் இருக்கிற ஐட்டங்களுக்குக் குறி வைப்பார்கள். ‘கவட்டை’ என்கிற அந்தச் சின்ன ஐட்டத்தைக் கையில் வைத்திருந்தாலே சிலர் சுதாரிப்பாக ஒதுங்கிப் போய் விடுவார்கள்.
ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குக் ‘குரங்கு’ மாதிரி தாவுவார்கள். அங்கிருந்து கத்தியபடியே கீழே பொத்தென்று விழும்போது, அவர்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும்போது, பார்ப்பவர்களுக்கு விளையாடுகிறவர்களுக்கு வால் இல்லாததுதான் ஒரு குறையாகத் தெரியும்.
ஊர்க்கிணற்றில் விளையாடி, ஆற்றில் கிடையாய்க் கிடந்து அந்தக் கிராமத்தின் மொத்தப்பரப்பே அவனுக்குப் பரிச்சயமாயிருக்கும். மற்றவர்களுடன் பேசுவதில் தயக்கமோ, கூச்சமோ இல்லாத மனநிலை அவனுக்கு வந்திருக்கும். படிப்பும் முக்கியம். வளர்கிற ஊரிலிருந்து கிடைக்கிற மற்ற பண்புகளும் முக்கியம். உடல், மூளை இரண்டிற்கும் அங்கே பயிற்சி கிடைக்கிறது. பசி மிகுதியாகி அதிகம் சாப்பிட முடிகிறது. இப்போது அதற்கு நேரெதிர்.
கருத்துகள்
கருத்துரையிடுக