பக்திப் பயிரும்… பசுமைப் பயிரும்…நம்மாழ்வார்!
நம் இந்திய நாடு வேளாண்மையில் சிறந்த விவசாய நாடு. இங்கு வற்றாத ஜீவநதிகள் உண்டு. காலம் அறிந்து பெய்யும் பருவமழையும் உண்டு. இத்தகைய இயற்கை வளங்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரங்கள். குறிப்பாகத் தமிழகம் மூவாயிரம் ஆண்டுப் பழமையும் பெருமையும் உடையது. வேட்டைக்காரச் சமுதாயமாக இருந்த மனிதஇனம், கால்நடைச் சமுதாயத்திற்கு மாறிப் பின்னர் ஆற்றங்கரை நாகரீகத்தை நாடி வேளாண்மைச் சமுதாய வாழ்க்கை முறையைத் தொடங்கியது. நம் தமிழர்கள் மலையும் மலைசார்ந்த இடத்தைக் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடத்தை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த பகுதிகளை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த பகுதிகளை நெய்தல் என்றும் மணலும் மணல் சார்ந்த பகுதிகளைப் பாலை என்றும் பிரித்து அந்தந்த நிலத்துக்கேற்ற வேளாண்மை முறைகளையும் தொழில்களையும் செய்து வந்தார்கள். ...