கண்ணன் எனும் பழைமையான கடவுள்…
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஓளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்… திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமே முழுமைபெற்ற அவதாரமாகக் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார். தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களும் அந்நிலங்களுக்குரிய கடவுளர்களுமாகச் சொல்லப்படும்போது “மாயோன் மேய காடுறை உலகமும்” என முல்லை நிலத்திற்குரிய கடவுளாகக் கண்ணபிரான் கூறப்படுகிறார். பன்னிரு ஆழ்வார்களும் அவர்களில் ஒருவராகிய ஆண்டாளும் மேற்குறித்த பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரத்தையே மகிழ்ந்து மகிழ்ந்து பாடுகின்றனர். மகாகவி பாரதியாரும் ‘கண்ணன் பாட்டு’ எனும் தனி இலக்கிய வடிவ...