முத்திரைக் கதைகளில் முத்திரை பதித்தவர்….
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர் உலகில் தனக்கெனத் தனியே ஒரு சிம்மாசனத்தை உருவாக்கிக்கொண்ட பெருமை எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கே உண்டு. நான் பள்ளியில் படிக்கிற காலங்களில் ஆனந்தவிகடனில் இவருடைய கதைகள் தொடர்ச்சியாக முத்திரைக் கதைகளாகப் பரிசு பெற்று வந்ததை நான் அறிவேன். என் தந்தையார் என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பாரதம், இராமாயணம் இவற்றோடு நவீன கால இலக்கியம் என்று வரும்போது கல்கி, ஜெயகாந்தன் போன்றோருடைய படைப்புகளையும் படிக்கச் சொல்லுவார். குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் ஜெயகாந்தனுடைய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை நான் படிக்கும்போதும், அதில் வருகிற ஓவியர் கோபுலு அவர்களின் ஓவியங்களைப் பார்க்கிறபோதும் பெருமகிழ்வு அடைவேன் (2003க்குப் பிறகு கலைஞானி கமல்ஹாசன் அவர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவரிடத்தில் ஒருநாள் இந்த நாவலை ஏன் படமாக்காமல் போனீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும் ‘அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். ஹென்றி பாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராகக்கூட இருந்தேன். அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை’ என்றார் ...