இல்லாதன இல்லை இளங்குமரா…’
சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்…. இராமநாதபுரம் நகைச்சுவை மன்றத்தை உருவாக்க உதவியாய் இருந்த என் இனிய நண்பர், பண்பாளர் திரு. நாராயணன் அவர்கள், நண்பர்களின் கூட்டத்தாரோடும், அவர்களின் குடும்பத்தாரோடும் எங்களை இராமேசுவரத்திற்கு அருகிலே மண்டபத்திற்கு இடையிலே உள்ள நல்லதண்ணீர் தீவுக் கூட்டத்திற்கு மோட்டார் படகினிலே அழைத்துச் சென்றார். அத்தீவு அகலம் குறைந்து நீண்டு காணப்பட்டது. அத்தீவில் ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடலலை. மறுபுறம் ஞானிகளின் மனம் போன்ற சலனமற்ற நீர்நிலை! பளிங்கு தண்ணீர், வெண்பட்டு மணல், புன்னை மரங்கள், அதைப் பார்த்து ஆனந்தப்பட்ட நான் அந்த அமைதியான கடல் நீரில் இறங்கினேன். ‘ஐயா! அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதீங்க!’ என்று சொல்லி, இடுப்பளவு நீரில் ஓடிவந்து ஒரு மீனவர் என் கையைப் பிடித்துக்கொண்டார். ...